பெற்றோர் அடித்ததால் மாடியில் இருந்து குதித்து சிறுவன் தற்கொலை!

உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்வை சேர்ந்த 8 வயது சிறுவன் ஆன்டன். பள்ளி மாணவனான இவனை பெற்றோர் அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவன் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தான். இந்த நிலையில் அண்மையில் வீட்டில் இருந்த துணிகளை சேதப்படுத்தியதாக கூறி சிறுவன் ஆன்டனை பெற்றோர் கடுமையாக திட்டி, அடித்தனர். இதனால் மனமுடைந்த அவன் அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து குதித்தான். இதை பார்த்து பதறிப்போன அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் வருவதற்குள் அவன் பரிதாபமாக இறந்து விட்டான். இதற்கிடையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர் அங்கிருந்து தப்பி ஓடி, தலைமறைவாகி விட்டனர். அவர்கள் இருவர் மீதும் போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்து, தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!