தாராளவாதிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொலைபேசி கட்டணங்கள் குறையும் – கனடா பிரதமர்!

தனது தாராளவாதிகள் (லிபரல் கட்சியினர்) அடுத்தமாதம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொலைபேசி கட்டணங்களை 25% குறைப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, (ஞாயிற்றுக்கிழமை) உறுதியளித்துள்ளார். கனடாவின் ஒன்ராறியோவின் பிராம்ப்டனில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் தனது ஆதரவாளர்களிடம் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார். இதன்போது, முக்கிய சேவை வழங்குநர்களை அவர் கட்டாயப்படுத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21 ஆம் திகதி தேர்தலுக்கு முன்னதாக செலவினங்கள் என்பது ஒரு முக்கிய விடயமாகும். என்பதுடன், ஏழு தொழில்மயமான நாடுகளின் குழுவில் கனேடியர்கள் அதிகமாக தொலைத்தொடர்பு​சேவைகளுக்கு கட்டணம் செலுத்தியுள்ளதாக ட்ரூடோ தெரிவித்தார்.

“கனேடியர்கள் தங்களின் கைத்தொலைபேசி சேவைகளை தெரிவு செய்வதற்கும், வீடுகளை வெப்பமேற்றுவதற்கும் இடையே தெரிவுகளை மேற்கொள்ளத் தேவையில்லை” என்று அவர் பிராம்ப்டனில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலும் கருத்து தெரிவித்தார். அந்த வகையில், நான்கு பேர் கொண்ட சராசரி கனேடிய குடும்பம் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்டுதோறும் 976 கனேடிய டொலர் ($ 735) வரை சேமிக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், எதிர்வரும் தேர்தலில் லிபரல் கட்சியினர் (தாராளவாதிகள்), எதிர்க்கட்சியான கன்சவேடிவ்களுக்கு எதிராக கடுமையான போரை எதிர்கொள்வதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்த வாரம் ட்ரூடோவை கறுமையான முகத்துடன் காட்டும் ஔிப்படங்கள் வௌியானதை அடுத்து இந்த நெருக்கடி தோன்றியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!