தமிழருக்கு ஒரு சட்டம், பிக்குகளுக்கு ஒரு சட்டமா?

நாட்டில் தமிழர்களுக்கு ஒரு சட்டம் , பெளத்த மதகுருக்களுக்கு ஒரு சட்டம் என்ற அமைப்பில் இருக்கின்றதோ என சந்தேகிக்க தோன்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

“நீதிமன்ற உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெளத்த மதகுருவின் பூதவுடலை தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இதில் இருந்து ஒன்று மட்டும் புலப்படுகின்றது சட்டம் தமிழர்களுக்கு ஒன்று பெளத்த மத குருக்களுக்கு ஒன்று. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றனர்.

சமாதான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நம்பிக்கை வைத்துள்ளன.

ஆனால் இன்றைய நிகழ்வுகள் ஒருபோதும் நாம் ஒற்றுமையாக வாழ முடியாது என்பதை உணர்த்தி நிற்கின்றன. கடந்த கால எமது ஆயுத போராட்டங்களும் இப்படிப்பட்ட பாதிப்புக்களினாலே ஏற்பட்டன என்பதை ஏன் பேரினவாதம் உணர்ந்து கொள்ளவில்லை.

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் இதற்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் முன்வர வேண்டும் சட்டம் அனைவருக்கும் சமன் என்பதை இந்த நாடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!