வரலாற்றில் முதல் முறையாக விண்வெளியில் தனியாக நடக்கப்போகும் வீராங்கனைகள்

சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் கிரிஸ்டினா மற்றும் ஜெசிகா ஆகிய 2 வீராங்கனைகள் வருகிற 21-ந்தேதி வீரர்கள் துணையின்றி விண்வெளியில் தனியாக நடக்க போவதாக நாசா அறிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இவர்கள் பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டுமானப்பணிகளுக்காக சில மணி நேரம் விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு வெளியே சென்று, விண்வெளியில் நடந்து வேலை செய்வது வழக்கம். இதுவரை இந்தப் பணிகளை பெண்கள் மட்டுமே செய்தது கிடையாது. அதாவது விண்வெளி வீரர்களின் துணையுடன்தான் விண்வெளி வீராங்கனைகள் விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு வெளியே செல்வது வழக்கம்.

1965-ம் ஆண்டில் இருந்து இதுவரை 213 வீரர்கள் விண்வெளியில் நடந்து இருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடுகையில் 14 வீராங்கனைகள் மட்டுமே விண்வெளி நடையை மேற்கொண்டிருக்கிறார்கள். அதிலும் அவர்கள், வீரர்களோடு இணைந்துதான் சென்றுள்ளனர். தனியே சென்றதில்லை.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி கிறிஸ்டினா கோச் மற்றும் ஆன் மெக்லைன் ஆகிய 2 வீராங்கனைகள் மட்டும் விண்வெளியில் நடந்து ஆய்வு மையத்தின் வெளியில் உள்ள பேட்டரிகளை மாற்றுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விண்வெளியில் பயன்படுத்தும் ஆடை பற்றாக்குறையின் காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் இந்த வரலாற்று நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் முயற்சியில் ‘நாசா’ மீண்டும் இறங்கி உள்ளது. அந்த வகையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் கிரிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மெயிர் ஆகிய 2 வீராங்கனைகள் வருகிற 21-ந்தேதி வீரர்கள் துணையின்றி விண்வெளியில் தனியாக நடந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என நாசா அறிவித்துள்ளது.

இது வரலாற்று சாதனையாக அமையும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!