கொலை அச்சுறுத்தல் – சிஐடியில் முறைப்பாடு

கோத்தாபய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த சிவில் செயற்பாட்டாளர்களான காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோர் தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

நேற்று குற்ற விசாரணைப் பிரிவில் இவர்கள் இருவரும் தமக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தனர்.

சமூக ஊடகங்கள் வழியாக தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்படுவதாகவும் பேராசிரியர் தெனுவர தெரிவித்துள்ளார்.

தாம் மரண அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது, வெள்ளை வான் கலாசாரம் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் ஊடகவியலாளர்களின் உயிருக்கு ஆபத்து இருந்த காலத்தை நினைவுபடுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை வான் கலாசாரம் மீண்டும் வருவதை நாங்கள் விரும்பவில்லை, ஆனால் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!