காணாமல் போனவர்கள்- முரண்படும் கோத்தாவின் புள்ளிவிபரம்!

கேணல் ரமேஸ் சரணடைந்த போது, அப்போது அமைச்சராக இருந்த எஸ்.பி.திஸாநாயக்க, அவருடன் பேசியதாக தெரிவித்திருந்தார். ஆகவே கோத்தபாய ராஜபக்ஸ முதலில் அவருடன் பேசி, அதனை தெரிந்து கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு வடமாகாண ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலும், கோத்தபாய அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“சென்ற வருடம் எஸ்.பி.திஸாநாயக்க கேணல் ரமேஸ் சரணடைந்த வேளை தான் அவருடன் பேசியதாக தெரிவித்திருந்தார். ஆகவே கோத்தபாய ராஜபக்ஸ முதலில் எஸ்.பி.திஸாநாயக்கவுடன் பேசி அதனை தெரிந்து கொள்ள வேண்டும்.

யுத்தம் முடிவடைந்ததாக சொல்லப்பட்ட காலத்திலும், சரணடைந்ததாக சொல்லப்பட்ட காலத்திலும் பலர் காணாமல் போயுள்ளார்கள். அந்த எண்ணிக்கையை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்.

உலகில் போர் நடந்த நாடுகளில் காணாமல் போதல்கள் நடந்துள்ளன. நடக்கின்றன. இங்கும் வடக்கு மற்றும் தெற்கிலும் நடந்துள்ளன. அதிலிருந்து நாம் மீள முடியாது. கோத்தபாய ராஜபக்ஸ கொடுத்த எண்ணிக்கைக்கும், உண்மையான எண்ணிக்கைக்கும் இடையில் இடைவெளி இருப்பதையும் நான் அவதானித்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் பிரதமருடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!