அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு

அதிபர் தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான கூட்டம் ஒன்றுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இன்று காலை இந்தக் கூட்டம், தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்துகின்ற மூன்றாவது கூட்டம் இதுவாகும்.

அதிபர் தேர்தல் நொவம்பர் 16ஆம் நாள் நடக்கவுள்ள நிலையில், அஞ்சல் மூல வாக்களிப்பு, வரும் 31ஆம் நாளும், நொவம்பர் 1ஆம் நாளும் இடம்பெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு ஏற்கனவே, வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், நாளுக்கு நாள் தேர்தல் விதிமீறல் முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்ற பின்னணியில் இன்றைய கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதுவரை சுமார் 2000 தேர்தல் முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!