சஜித் பிரேமதாச போன்ற சாதாரண மனிதனுடன் விவாதத்துக்கு சென்று கோத்தபாய ராஜபக் ஷவின் நற்பெயரை பாதிப்படையச்செய்ய நாங்கள் இடமளிக்கமாட்டோம் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கோத்தபாய ராஜபக் ஷ முடியுமானால் பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும் என சஜித் பிரேமதாச விடுத்திருக்கும் சவாலுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
முழு உலகமும் தோற்கடிக்க முடியாது என தெரிவித்த கொடூர யுத்தத்தை மிகவும் சூட்சுமமான திட்டமிடல் மூலம் தோற்கடித்தவர்தான் கோத்தாபய ராஜபக்ஷ். அதற்காக அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றவர். அதேபோன்று கணனி விஞ்ஞானத்தில் பட்டப்பின் பட்டம் பெற்றவர். அத்துடன் சிங்கப்பூர் மற்றும் சீன பல்கலைக்கழகங்களின் அழைப்பின்பேரில், நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு திட்டம் தொடர்பாக ஆய்வுமேற்கொண்டவர்.
பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் வைத்தியர்கள் சட்டத்தரணிகள் போன்ற கல்விமான்கள் இணைந்து உருவாக்கிய அறிஞர்களின் அமைப்புதான் வியத்மக என்பதாகும். அந்த அறிஞர்கள் தங்களின் தலைவராக கோத்தாபய ராஜபக்ஷ்வையே தெரிவுசெய்துகாெண்டார்கள். அதன் பிரகாரம் கோத்தாபய ராஜபக்ஷ் என்பவர் இலங்கையில் இருக்கும் அறிஞர்களுக்கு மத்தியில் இருக்கும் சிறந்த அறிஞர்.
ஆனால் இவ்வாறான கல்வியலாளரை விவாதத்துக்கு அழைக்கும் சஜித் பிரேமதாச என்பவர் யார். ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் மிவும் நகைச்சுவையான வேட்பாளர். சிறுபிள்ளைத்தனமாக பேசும் இவருக்கு தனது கொள்கை பிரகடனத்தைக்கூட இதுவரை வெளியிடமுடியாமல் இருக்கின்றது. செயற்படுத்த முடியாத வாக்குறுதிகளை மாத்திரமே அவரால் தெரிவிக்கமுயும்.
எனவே இவ்வாறு நகைச்சுவை பேசிக்கொண்டிருக்கும் ஒருவருடன் கோத்தாபய ராஜபக்ஷ் போன்ற சிறந்த கல்விமானை விவாதிப்பதற்கு எவ்வாறு அனுப்புவது? அதனால் கல்விமான்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுவரும் கோத்தாபய ராஜபக்ஷ்வை கல்வியறிவு இல்லாத சஜித் பிரேமதாசவுடன் விவாத்துக்கு அனுப்பி அவரின் நற்பெயரை அசிங்கப்படுத்திக்கொள்ள நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!