ஓய்வுபெறும் எண்ணம் இல்லை! – ரணில்

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தனக்கு இதுவரை ஏற்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தற்போது அனைவரும் கதைக்கிறார்கள். ஆனால், குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவரையும் நாம் இன்று கைது செய்துள்ளோம். சட்டத்திற்கு உட்பட்டே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதற்காக எமக்கு வெள்ளை வான்கள் தேவைப்படவில்லை. இவர்கள் அனைவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும். தற்போது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையும் எமக்கு கிடைத்துள்ளது. இதற்கிணங்க, பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக புதிய சட்டத்திட்டங்களை வகுக்கவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அத்தோடு, எமது அரசியல் வாழ்க்கையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆனால், இப்போதே நான் ஓய்வுப் பெறவேண்டியத் தேவையில்லை என்றே கருதுகிறேன். எம்மைப் பொறுத்தவரை இந்த நாட்டை கடன் இல்லாத நாடாக மாற்றவேண்டும் என்பதுதான் இப்போதைய ஒரே நோக்கமாகும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!