தாய்க்காக ஒரு திருமணம்.. தனக்காக மறு திருமணம்..! – இளம்பெண் அதிரடி.

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடில் தாயின் மிரட்டலுக்கு பயந்து 15 வயதில் முறைப்படி திருமணம் செய்து கொண்ட சிறுமி ஒருவர், 25 வயதான நிலையில், இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. 2 குழந்தைகளுடன் முதல் கணவனும், நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசும் தவிக்கும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டை சேர்ந்த ரமேஷ் என்ற சமையல் தொழிலாளிதான் 2 குழந்தைகளுடன் தவிக்கும் அப்பாவி கணவன்..! தனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தான் துபாய்க்கு வேலைக்கு சென்ற நேரத்தில், மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று அகில் என்ற இளைஞருடன் தொடர்பில் இருந்ததாக குற்றஞ்சாட்டுகின்றார். தனக்கு 18 வயது கூட நிரம்பாத பெண்ணை பெயர் மாற்றி மோசடியாக திருமணம் செய்து விட்டதாக தெரிவிக்கும் ரமேஷ், தற்போது முதல் திருமணத்தை மறைத்து தனது மனைவி அகிலை பாதிரியார் முன்னிலையில் 2 வது திருமணம் செய்துள்ளதாகவும் இதனால் குழந்தைகள் தவிப்பதாகவும் போலீசில் புகார் தெரிவித்தார்.

இரு குழந்தைகளும் தனக்கும், ரமேஷ்குமாருக்கும், பிறந்தவை என்று ஒப்புக் கொண்ட பிரீத்தி, ஆவணப்படி ரமேஷ்குமார் திருமணம் செய்தது தனது தாயை என்று கூறி திடுக்கிட வைத்தார். மேலும் 50 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக தனது தாய் ரமேஷ்குமாருடன் தன்னை அனுப்பி வைத்ததாகவும் குற்றஞ்சாட்டினார். ரமேஷ்குமார் தினமும் சந்தேகப்பட்டு தன்னை அடித்து உதைத்ததாகவும், இரு குழந்தைகளையும் தன்னிடம் தர மறுத்து விரட்டிய பின்னர் காதலன் அகில் அடைக்கலம் தந்ததாகவும், ரமேஷ்குமார் தன்னை பற்றி முக நூலில் அவதூறு பரப்பியதால் காதலன் அகிலையே முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் பிரீத்தி விளக்கம் அளித்தார்.

காவல்துறையினரிடம் தனது சிறுவயது வாழ்க்கை குறித்தும் ரமேஷ்குமாருடனான வாழ்க்கை குறித்தும் விவரித்த பிரீத்தி, ஆவணப்படி ரமேஷ்குமாரின் மனைவி தான் அல்ல தனது தாய் தான் என்று கூறி திடுக்கிட வைத்தார். 15 வயதுள்ள பெண்ணை திருமணம் செய்வதற்காக திருமண பதிவு சான்றிதழில் மணப்பெண்ணின் வயது சான்றுக்கு பதிலாக, மாமியாரின் வயது சான்றிதழை இணைத்து மோசடி செய்ததால், ரமேஷ்குமாரின் மனைவி யார் என்று முடிவுக்கு வர முடியாமல் போலீசாரும் தவித்து நிற்கின்றனர்..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!