இரண்டாவது தடவையும் நிபந்தனைகள் அற்ற ஆதரவு ஏன்? – சிவகரன் கேள்வி

நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை தாங்கள் ஆதரிப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல. ஏற்கனவே எதிர் பார்க்கப்பட்ட ஒன்று தான். 2015ஆம் ஆண்டும் எந்த வித நிபந்தனையும் இல்லாமல் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதங்கள் என்ன? கடந்த நான்கரை ஆண்டுக் காலம் அரசாங்கத்தைத் தாங்கிப் பிடித்தீர்கள் அதனால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை கிட்டியதா?எனத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விடையம் தொடர்பில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இன்று சனிக்கிழமை(9) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

பாவம் தமிழ் மக்களை எத்தனை தடவை தான் ஏமாற்றி விட்டீர்கள். உங்கள் வயதிற்கும், அறிவிற்கும் அனுபவத்திற்கும் நீங்கள் கூறிய வாசகங்கள் பொங்கலுக்குத் தீர்வு, அடுத்த தீபாவளிக்குள் தீர்வு, ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி, இதோ நல்ல செய்தி வருகிறது மைத்திரியை மண்டேலா, காந்தி என்றும் தமிழ் மக்களுக்குத் தீர்வு வந்து விட்டது போலும் 2015ஆம் ஆண்டிலிருந்து அண்டப்புழுகு, ஆகாசப்புழுகுகள் கூறி ஏமாற்றினீர்கள் மூன்று தடவை நம்பிக்கை இல்லாப் பிரேனையில் இருந்து அரசைப் பாதுகாத்தீர்கள் இதன் மூலம் தமிழ் மக்களுக்குக் கிடைத்த நன்மைகள் என்ன ? சில இடங்களில் காணி விடுவிக்கப்பட்டதைத் தவிர அவையும் முழுமை அல்லவே எதுவித முன்னேற்ற கரமான விடயங்களும் நடைபெறவில்லை.

அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவில்லை, புதிய அரசியல் அமைப்பு முயற்சி முற்றுப் பெறாது என்று ஏலவே தெரிந்த விடயம் இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு எதுவித முனைவும் மேற்கொள்ளவில்லை

மாறாகக் கூட்டமைப்பினர்தான் பதவி அனுபவத்தீர்கள் எதிர்க்கட்சி தலைவர்,பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவர் பதவிகள், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உத்தியோக பற்றற்ற அமைச்சர் இந் அரசுடன் ஐக்கிய உறவாக இருந்தீர்கள் தமிழ்த் தேசியத்திற்கு பெரும் துரோகம் செய்த டக்ளஸ் தேவானந்தா கடந்த காலத்தில் செய்த பிற்போக்குத்தனமான விடயங்களையே நீங்களும் மேற் கொண்டு மென் சக்தி நகர்வில் தமிழ்த் தேசிய நீக்கத்தில் ஈடுபட்டீர்கள் சிங்கள கட்சிகளுக்குத் தமிழர்கள் வாக்களிக்கும் மனநிலையை ஏற்படுத்தியது நீங்கள் தான்.

தமிழ்த் தேசிய வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது. வரலாறு உங்களை துரோகியாகவே பதிவு செய்யும் என்று 2014ஆம் ஆண்டு கட்சி மகாநாட்டில் உங்கள் முன்னிலையிலே கூறியவன் அடியேன்.

நிபந்தனையற்ற ஆதரவில் தமிழ்மக்களுக்கு எந்த விமோசனத்தையும் பெற்றுத்தராது என உங்கள் பேரப்பிள்ளைக்கு சமனான என்னால் 2014ஆம் 2015ஆம் ஆண்டில் கட்சி கூட்டத்திலும், பொது வெளியிலும் முன்வைத்த அனைத்து விடயங்களும் சரியாக விட்டது அந்த முரண்பாட்டினால்தான் கட்சியை விட்டு வெளியேறினோம்.

உங்களுக்கு ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறேன். 2015ஆம் ஆண்டில் விட்ட அதே வரலாற்றுத் தவறுதான் இந்த ஜனாதிபதி தேர்தலிலும் செய்துள்ளீர்கள்.

தமிழ் மக்களுக்கு எந்த விதமான அடிப்படைப் பிரச்சனையும் தீராத போது கண்ணை மூடிக் கொண்டு எழுபது ஆண்டுகளாகச் சுதந்திர வாழ்வுரிமை கோரி போராடியவர்கள் தமிழ் மக்கள் மூன்று தசாப்தங்களுக்கு மேல் விடுதலை நோக்கி ஆயுதமுனையில் போராடி விடுதலை வேள்விக்காய் பல இலட்சம் தமிழ் மக்களின் இன்னுயிர்கள் ஆகுதியாகின.

இறுதியில் இந் நூற்றாண்டின் நன்கு திட்டமிட்ட இனப் படுகொலையும் முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்டன ஒவ்வொரு தமிழன் உயிரும் எதற்காக இந்த மண்ணில் மடிந்தது என்பது கூட உங்களுக்குத் தெரியாதா? நிபந்தனை அற்று சிங்களவருக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்க வல்லான்மை இல்லாத வழிப்போக்கன் இனம் இல்லை விடுதலைக்காகப் போராடிய வீறு கொண்டு எழுந்த இனம் நீங்கள் பன்நாட்டுத் துரதரகங்களின் அனுசரணையுடன் நிபந்தனையின் அடிப்படையில் ஆதரித்திருக்க வேண்டும். நிபந்தனைகளுக்கு கால நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.

உங்கள் மனச்சாட்சிகளைத் தொட்டு சொல்லுங்கள் டி.எஸ்.சேனநாயக்க தொடக்கம் இன்றைய மைத்ரிபால சிறிசேன வரை தமிழ்மக்களுக்கு விசுவாசமாக நேசக்கரம் நீட்டிய தலைவர்கள் உண்டா? காலத்திற்குக் காலம் எல்லாத் தலைவர்களும் ஏமாற்றினார்கள். என்னும் வரலாறு தாங்கள் அறியாமல் இல்லை இழப்பதற்கு எதுவும் இல்லாத அளவிற்கு எஞ்சிய உயிரைத் தவிர எதுவும் இல்லாத ஏதிலி தமிழர்களுக்குத் தலைமை தாங்கும் தார்மீக தகுதியை இழந்து விட்டீர்கள் .

நீங்கள் நினைத்திருந்தால் ஒவ்வொரு தடவையும் நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் போது பல அன்றாட பிரச்சினைகளை தீர்த்திருக்கலாம் குறைந்த பட்சம் கல்முனை பிரதேச செயலக விடயம் கூட கைகூடவில்லை அரசாங்கத்தின் இதயத்தில் இருக்கிறோம். புதிய அரசியல் அமைப்பு உருவாக்க முடியவில்லை என்றால் அரசியலை விட்டு விலகுவேன் என்றார் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் செய்தீர்களா?

ரணில் அரசை காப்பாற்ற நீதிமன்ற படி ஏறியது போல் காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் அரசியல் கைதிகள் விடுதலைக்கும் நீதிமன்றப் படி ஏறி இருக்கலாமே! கம்பரலியாவில் காட்டிய வேகம் தமிழ் மக்கள் நலனில் காட்டவில்லை. உங்கள் அரசியல் சித்தாந்தம் தோற்றுவிட்டது தமிழ்மக்களின் கூட்டுத்தலைமையை ஏற்கும் தகுதியை இழந்து விட்டீர்கள்.

உலகம் முழுவதும் அரசியல் தலைவர்கள் தமது வழி வரைபட சித்தாந்தம் தோற்றுவிட்டால் விலகி வழி விடுவதே உண்மையான ஜனநாயக பிரதிநிதித்துவ அரசியல் முறைமை.

ஆகவே மேலும் தமிழ் மக்களை ஏமாற்றாமல் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் ‘காற்று இடைவெளியை நிரப்பும் தேசம் தன் தலைமையைத் தீர்மானிக்கும்’ இனப்படுகொலை செய்த கோத்தாபய வந்தால் என்ன? இதுவரை கோட்பாடுகள் இன்றி தூர நோக்கு இன்றி பேசும் சஜித் பிரேமதாச வந்தால் என்ன? எதுவும் நடக்கப்போவது இல்லை தேர்தல் விஞ்ஞாபனம் என்பது ஒரு சட்ட ஆவணம் இல்லை அதை நிறைவேற்ற வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை.

கூட்டமைப்பே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒரு போதும் பின் பற்றுவதில்லை பெரும்பான்மையான தமிழ் மக்கள் இனியும் உங்களை நம்பமாட்டார்கள்.

பல இயக்கங்கள், கட்சிகள் வந்தபோதும் புலிகளை மட்டும் ஏன் தமிழ் மக்கள் விசுவசித்தார்கள். அவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை. தமிழரசுக் கட்சித் தலைமை என்பது ஆளுமை இல்லாத வெறும் இறப்பர் முத்திரை தான்.

பல்கலைக்கழக மாணவர்களையும் போலி ஒப்பந்தம் செய்து ஏமாற்றினீர்கள். கூட்டமைப்பின் ஏமாற்று நாடகத்திற்கு ஆமா சாமி போடும் பங்காளிக் கட்சித்தலைவர்களும், கூட்டமைப்பின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். ஆகவே தமிழ் மக்களின் தூர நோக்கை இலக்காக கொண்டு இனியாவது சிந்திப்பதற்கு முன்வாருங்கள் என வேண்டுகை விடுக்கின்றோம் எனக் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!