2009 இல் இடம்பெற்ற இந்தியத் தொடர் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி – ரணதுங்க

2009 ஆம் ஆண்டு இந்திய தொடர் நடத்தும் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றதாகவும் 15 மில்லியன் டொலர் நிதி வரவேண்டியிருந்தும் வெறுமனே 3 மில்லியன் டொலர் மட்டுமே இலங்கை கிரிக்கெட் சபைக்கு வந்தது.

ஏனைய பணத்தொகை என்னவானது என்பது தொடர்பில் கண்டறிய விசாரணைகளை நடத்த வேண்டும் என்கிறார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளை தடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் அமைச்சர் இந்த விடயங்களை வெளிப்படுத்தினார். அவர் இதில் கூறியதாவது.

கடந்த காலங்களில் கிரிக்கெட் சபையில் தன்வசப்படுத்திக்கொண்ட சிலர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைக்கு வரவேண்டிய பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இதனால் இலங்கை கிரிக்கெட் சபையும் வீரர்களுமே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய தொடரொன்று இடம்பெற்ற போது சில தவறுகள் இடம்பெற்றுள்ளன. அப்போது கிரிக்கெட் சபையில் இருந்து என்னை நீக்கிவிட்டு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அவ்விடத்தில் நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னரே இந்திய சுற்றுபயணம் நடத்தப்பட்டது. இந்த தொடரில் அதிகளவிலான தொகை எமக்கு இல்லமால் போனது.

இந்தத் தொடரில் குறைந்த பட்சம் 14-15 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வரவேண்டும். ஆனால் இந்த தொடர் குறித்த உடன்படிக்கையில் எமக்கு 6.6 மில்லியன் டொலர்கள் என்ற உடன்படிக்கை செய்யப்பட்டது.

ஆனால் கிடைத்தது 3 மில்லியன் டொலர்கள் மட்டுமேயாகும். ஏனைய தொகை என்னவானது, இதனை யார் கையாண்டது என்ற இந்த ஊழல்கள் அனைத்தையும் தேடிப்பார்க்க வேண்டும். கிரிக்கெட் சபைக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இது தனிப்பட்ட ஒரு சிலறின் தேவைக்காக செய்யப்பட்ட ஊழலாகும்.

இதுவரை காலமாக விளையாட்டுத்துறை அமைச்சர்கள் செயற்பட்டும் குற்றவாளிகள் பலர் குறித்து தெரிந்தும் எவரும் சட்டம் ஒன்று கொண்டுவந்து குற்றவாளிகளை தண்டிக்க முன்வரவில்லை. இப்போதாவது இதனை கொண்டுவந்து விளையாட்டை நேர்த்தியாகக வேண்டும் என்பதே எமது விருப்பம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!