ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் முகங்கொடுத்துள்ள வன்முறைகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ விற் கு கூறியிருப்பதாகவும் அத்தகைய வன்முறை சம்பவங்கள் தடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்திருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச மற்றும் நகரசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், சஜித் பிரேமதாசவிற்கு பெரும்பான்மையாக வாக்களித்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் சில பதிவாகியிருந்தன. அதேபோன்று அவர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வெறுப்புணர்வுப் பேச்சுக்கள் பரப்பப்படுவதையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள வன்முறைகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவுடன் கலந்துரையாடியிருப்பதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவரது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பதிவிட்டிருக்கிறார்.
அப்பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ள வன்முறைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன். அத்தகைய வன்முறைகள் தடுக்கப்படும் என்று அவர் என்னிடம் உறுதியளித்திருக்கின்றார். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதை தேர்தல் காலத்தில் மாத்திரமன்றி, அதன் பின்னரும் உறுதி செய்வது மிகவும் அவசியமானதாகும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!