பாராளுமன்றை கலைக்க ஐ.தே.க.வின் ஆதரவை கோரும் பொதுஜன பெரமுன

பாராளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு வசதியாக தற்போதைய பாராளுமன்றத்தை கலைப்பதற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்கு ஐக்கிய தேசிய கட்சிய ஒத்துழைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பத்தரமுல்ல – நெலும்மாவத்தையில் பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலே மக்கள் அவரை வெற்றியடையச் செய்துள்ளனர். மக்களின் தீர்மானத்தை செயற்படுத்த வேண்டும் என்றால் பாராளுமன்றத்தின் ஆதரவும் அதற்கு மிக முக்கியமாகும். இந்நிலையில் பாராளுமன்றத்தின் ஆதரவின்றி எந்த செயற்பாடுகளையும் கோத்தாபயவினால் முன்னெடுக்க முடியாது.

இதேவேளை ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை உடனடியாகவே கலைக்க முடியாது.எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதிக்கு பின்னரே பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் உண்டு.

இருந்த போதிலும் அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் கீழ் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் அதைகலைத்து பொதுதேர்தலுக்கு செல்லமுடியும். இதற்கான ஆதரவினை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதுவே ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் செயற்பாடாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!