ஆங்கில பாட புத்தகத்தை வாசிக்க தெரியாத ஆசிரியர்கள் இடைநீக்கம்!

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்துக்கு உட்பட்ட சிகந்தர்பூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் சமீபத்தில் மாவட்ட கலெக்டர் தேவேந்திர பாண்டே திடீரென ஆய்வுக்கு சென்றார். அப்போது ஆங்கில பாடம் நடந்து கொண்டிருந்த ஒரு வகுப்பறைக்கு சென்ற கலெக்டர், மாணவர்களின் ஆங்கில பாடப்புத்தகத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை வாசிக்குமாறு மாணவர்களிடம் கூறினார். ஆனால் எந்த மாணவருக்கும் அந்த பகுதியை வாசிக்க தெரியவில்லை. உடனே அவர் வகுப்பறையில் இருந்த துணை ஆசிரியர் ராஜ்குமாரியிடம் அந்த பகுதியை வாசிக்குமாறு கூறினார். ஆனால் அவருக்கும் வாசிக்க தெரியாததால், மூத்த ஆசிரியை சுசிலா பாரதியிடம் அந்த பகுதியை வாசிக்க கொடுத்தார். ஆனால் அவராலும் வாசிக்க முடியவில்லை.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த தேவேந்திர பாண்டே அந்த 2 ஆசிரியர்களையும் அதிரடியாக இடைநீக்கம் செய்து தற்போது உத்தரவிட்டு உள்ளார். இந்த தகவலை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பிரதீப் பாண்டே நேற்று தெரிவித்தார். ஆசிரியர்களுக்கே தாங்கள் படித்து கொடுக்கும் பாடப்புத்தகத்தை வாசிக்க தெரியாத விவகாரம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!