ஈழத்தை உருவாக்கப் பார்க்கிறது பிரித்தானியா- கம்மன்பில

பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலுக்காக கொன்சவேடிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு அரசுகளாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தல் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவிதுரு ஹெலஉறுமய கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரித்தானிய பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது. இதற்காக அந்நாட்டு ஆளும் கட்சியான கொன்சவேடிவ் கட்சி கடந்த 25ஆம் திகதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தது. அதில் இலங்கையில் இடம்பெறும் பிரச்சினைக்கு தீர்வாக இந்த நாட்டில் இரண்டு அரசுகளை உருவாக்கவேண்டும் என தேர்தல் விஞ்ஞாபனத்தின் 53 ஆம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதாவது, உலகம் பூராகவும் நல்லிணக்கம், நிலையான தன்மை மற்றும் நீதியை நிலைநாட்ட மேற்கொள்ளும் சர்வதேச ஆரம்பகர்த்தாக்களுக்கு எமது ஆதரவை வழங்குவதுடன் சைப்ரஸ், இலங்கை, மற்றும் மத்திய கிழக்கு போன்ற தற்போது அல்லது முன்னர் இருந்த பிரச்சினை இருக்கும் வலயங்களுக்கு தீர்வாக இரண்டு அரசுகள் உருவாக எமது ஆதரவை வழங்கிவருவோம் என தெரிவிக்கப்படுள்ளது.

தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கே இவர்கள் முயற்சிக்கின்றனர். இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஈழம் அல்லது வேறு பெயரிலோ தமிழ் அரசு ஒன்று இருந்ததில்லை.

அதனால் இவ்வாறான அரசு ஒன்றுக்காக தலையீடு செய்வதற்கு அவர்களுக்கு எந்த நியாயமான காரணமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!