புங்குடுதீவில் கடற்படைக்கு தனியார் காணிகளை சுவீகரிக்க முயற்சி!

புங்குடுதீவு கிழக்கில் கடற்படைத் தளத்துக்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளன. இது தொடர்பாக புலம்பெயர்ந்து வாழும் காணி உரிமையாளர்களிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள காணிகளே சுவீகரிக்கப்படவுள்ளன. இந்த காணிகளின் உரிமையாளர்கள் 14 நாட்களுக்குள் ஆட்சேபனைகளை அறியத்தருமாறு கிராம சேவகர்கள் ஜே/23 ஜே/24 (புங்குடுதீவு தென்கிழக்கு) கோரிக்கை விடுத்துள்ளனர்.

உரிமையாளர்களின் விபரம்: 1. குமாரவேலு பொன்னம்மா 2. சின்னத்தம்பி இராசேந்திரன் 3. சுப்பிரமணியம் மகேஸ்வரி 4. அண்ணாமலை கங்காசபை 5. ஐயம்பிள்ளை பாக்கியம் 6. வேலாயுதபிள்ளை செல்லம்மா 7. கந்தையா தியாகராசா 8. இராசையா கோணேசலிங்கம் 9. பஞ்சாசரம் தயாபரன் 10.செல்வராசு அம்பிகா

இதேவேளை, கடந்த மூன்று வருடங்களாக மண்கும்பானிலுள்ள தீவகத்தின் பிரதான கடற்படையினர் , புங்குடுதீவு வல்லன் கடற்படையினர் இக்காணிகள் மற்றும் அருகிலுள்ள மலையடி நாச்சிமார் கோயிலையும் உள்ளடக்கியதாக காணிகளை சுவீகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும், பிரதேச மக்கள் அதை தடுத்து நிறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் காணி சுவீகரிப்பிற்கான அறிவித்தல் புதிய ஆட்சியில் நவம்பர் 22ம் திகதி, வேலணை பிரதேச செயலகத்தின் ஊடாக விடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!