சூறைக்காற்றுடன் மழை- வெள்ளத்தில் மட்டக்களப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வீசிய கடும் காற்று காரணமாக மட்டக்களப்பு நகர் மற்றும் தேற்றாத்தீவு ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. இதனால், போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் பாடசாலையொன்றும் சேதமாகியுள்ளது.

கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் இருந்த வேப்பை மரம் முறிந்து வீழ்ந்ததில் பாடசாலைக் கட்டடம் சேதமடைந்துள்ளது. பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் இல்லாத காரணத்தினால் எந்தவித உயிர்ப்பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் பாடசாலை கட்டடம் சேதமடைந்துள்ளதுடன், பாடசாலை கட்டடத்திற்குள் இருந்த கற்றல் உபகரணங்களும் சேதமடைந்துள்ளன.

இதேபோன்று மட்டக்களப்பு நகரில் சின்ன வைத்தியசாலைக்கு அருகில் இருந்த மரம் வீழ்ந்ததன் காரணமாக மட்டக்களப்பு நகர் ஊடான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மக்கள் தொடர்ந்தும் இடம்பெயரும் நிலையேற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாக பெருமளவானோர் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவற்குடா, நொச்சிமுனை, உப்போடை, கூழாவடி, உப்போடை, ஊறணி, இருதயபுரம், கறுவப்பங்கேணி, நாவற்கேணி,கொக்குவில் உட்பட பெருமளவான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதேநேரம் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளை மட்டக்களப்பு மாநகரசபை முன்னெடுத்து வருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!