கிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் சிறிலங்கா உடன்பாடு

சிறிலங்காவின் கிழக்கு கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு செய்துள்ளது.

உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான, Schlumberger என்ற அமெரிக்காவின் எண்ணெய் வயல் சேவைகள் நிறுவனத்தின் துணை நிறுவனமான Eastern Echo DMCC நிறுவனத்துடன் இது தொடர்பான உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு, தரவுகளை திரட்டும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

கிழக்கு கடற்பகுதியில் தெரிவு செய்யப்பட்ட சில இடங்களில், இரு பரிமாண மற்றும் முப்பரிமாண ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளைத் திரட்டுவதற்கு அமெரிக்க நிறுவனம் 50 மில்லியன் டொலர்களை செலவிடும்.

சிறிலங்கா ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு கிழக்கு கடலில் எண்ணெய வள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு Total என்ற பிரெஞ்சு நிறுவனத்துடன் உடன்பாடு செய்திருந்தது.

எனினும், இந்த ஆய்வுகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!