ஐதேகவை பாதுகாக்கும் நோக்கம் கூட்டமைப்புக்கு இல்லை! – சம்பந்தன் கூறியதாக எஸ்பி தகவல்

ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை என்று இரா.சம்பந்தன் தெரிவித்ததாக எஸ்.பி திசாநாயக்க தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் ‘குழு16’ நேற்று முன்தினம் சந்தித்து உரையாடியமை தொடர்பாகவே எஸ்.பி திசாநாயக்க எம்.பி இவ்வாறு கூறினார்.

அரசிலிருந்து வெளியேறிய 16 எம்.பிக்களதும் செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு 10 இல் நடைபெற்றது. இதன்போதே இரா.சம்பந்தனுடனான சந்திப்பு சாதகமாக அமைந்ததாக அவர் கூறினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லையென்றும் அவ்வாறு மக்கள் நினைத்திருப்பார்களாயின் அது தவறு என சம்பந்தன் எம்.பி 16 பேரிடமும் சுட்டிக்காட்டியதாகவும் எஸ்.பி திசாநாயக்க எம்.பி தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு எட்டப்பட மாட்டாது என்றும் அவர் நம்பிக்கைக்குரியவரை போன்று செயற்பட்டாலும் உண்மையில் நம்பிக்கையை பாதுகாக்காதவரென்றும் 16 சு.க எம்.பிக்களும் இரா.சம்பந்தனிடம் கூறியதாகவும் அவர் இச்செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2001 ஆம் ஆண்டு பிரபாகரனுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் மூலம் நாட்டை தட்டில் வைத்து பிரபாகரனிடம் ஒப்படைத்தார். அப்போது நான் விவசாய அமைச்சராக இருந்தேன். அக்கால கட்டத்தில் வடக்கு செல்வதற்கு எல்.ரீ.ரீ.ஈயினரின் பாதுகாப்பு தேவைப்பட்டது” என சுட்டிக்காட்டிய திசாநாயக்க எம்.பி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தமிழர் பிரச்சினை ஒருபோதும் தீர்த்து வைக்கப்படாது என்றும் அவருக்கு அதற்கான தேவை இல்லையென்றும் இரா.சம்பந்தனிடம் விளக்கி கூறியதாகவும் தெரிவித்தார்.

இதன்போது சம்பந்தன் எம்.பி, டட்லி சேனாநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் பிரதமர் ஆவதற்கும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கும் தமிழ் மக்கள் பாரிய ஒத்துழைப்பை வழங்கியது போலவே இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர் என்றும் சு.க எம்.பிக்களிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாப்பதாக கூறும் குற்றச்சாட்டு நியாயமற்றது என்றும் அனைத்து இன மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கட்சிக்கே கூட்டமைப்பு எதிர்காலத்திலும் தனது ஆதரவை வழங்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர். அக்காலம் முதல் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளில் கடும் எதிர்ப்பைக் கொண்டிருப்பவர். நாடு இரண்டாக பிரிவதனை ஒருபோதும் விரும்பாதவர். சிங்களவர்கள் மற்றும் பௌத்தர்களின் ஒத்துழைப்புடன் வேலை செய்ய விரும்புபவர். சம்பந்தன் எம்.பியினாலோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பினராலோ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படவில்லை. சுதந்திரக் கட்சியிலுள்ள சில உறுப்பினர்களே அதன் தோல்விக்கு காரணமானார்கள். அதேபோன்று தெற்கில் சிங்கள மக்களின் அதிக நம்பிக்கையை வென்ற கட்சியுடன் இணைந்து செயற்படவே விரும்புவதாகவும் சம்பந்தன் எம்மிடம் தெரிவித்தார் ” என்றும் எஸ்.பி திசாநாயக்க எம்.பி தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!