திருமணமான 3 மாதத்தில் மனைவியை கொன்ற கணவன்!

வேளச்சேரியை அடுத்த பெரும்பாக்கம் பசும்பொன் நகரில் வசித்து வருபவர் அய்யனார் (வயது 31). இவரது மனைவி அஞ்சலி (21). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதம் ஆகிறது. இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அஞ்சலி வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அவரது கணவர் அய்யனாரும் மாயமாகி இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்த போது படுக்கை அறையில் அஞ்சலி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருந்தார். இதுபற்றி பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அஞ்சலியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணம் ஆனது முதலே அய்யனாருக்கும் அஞ்சலிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அய்யனார் உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மனைவி அஞ்சலியை அழைத்துள்ளார். ஆனால் அவர் உடன் செல்ல மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகராறில் ஆத்திரமடைந்த அய்யனார் மனைவி அஞ்சலி கழுத்தை நெரித்து கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அய்யனாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது. திருமணம் ஆகி 3 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!