இராணுவத்தில் இருந்து இடைநிறுத்தம்!

வவுனியா, போகஸ்வெவ இராணுவ முகாமுக்கு அருகில் இராணுவ சிப்பாயைத் தாக்கி விட்டு, துப்பாக்கியை பறித்துச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான சிப்பாய் இராணுவ சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபருக்கு எதிரான விசாரணைகள் நீதிமன்றம் மற்றும் அவர் சேவையாற்றிய படைப்பிவிரினால் தனித்தனியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரியேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கு மேலதிகமாக, பொலிஸாராலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இராணுவ முகாமின் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய், நேற்று அதிகாலை பணி முடிந்து சென்றுக் கொண்டிருந்த போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு துப்பாக்கி பறித்துச்செல்லப்பட்டிருந்தது.

காயமடைந்த இராணுவ சிப்பாய் அநுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், கெக்கிராவ பகுதியில் இருந்து குறித்த துப்பாக்கி இராணுவ பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர் என, தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!