உயிருடன் தர முடியாது, உதவிகள் வழங்குவோம்!

காணாமலாக்கப்பட்டவர்களின் உயிரை மீட்டுத் தரமுடியாது. அவர்களது குடும்பத்தாருக்கு உதவிகள் வழங்குவோம் என்று இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘ தமிழ் மக்களின் நம்பிக்கையை மத்திய அரசாங்கம் பெற வேண்டும். அதற்கேற்ற வகையில் மத்திய அரசாங்கம் செயற்பட வேண்டும். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தத் தொடங்க வேண்டும். சிங்களவர்களுக்கு தமிழ்மொழியை கற்பிக்க வேண்டும். அதேபோன்று தமிழர்களுக்கு சிங்களத்தைக் கற்பிக்க வேண்டும். ஒருவர் கூறுவது மற்றவருக்குப் புரிய வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்து என சொல்லுங்கள், எமது காணிகளை மீள வழங்குங்கள், எமது வாழ்க்கைக்கான தொழிலை நடத்த கடற்படையின் தடைகள் நீக்குங்கள் என்பன தமிழ்மக்களின் கோரிக்கைகளாகும்.

அவற்றுக்கு நாம் முடிந்தளவு தீர்வுகளை வழங்கியுள்ளோம். இறுதியாக காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினையில் அவர்களின் உயிரை மீட்டுத் தரமுடியாது. அவர்களுக்காக அவர்களது குடும்பத்தாருக்கு உதவிகள் வழங்குகின்றோம் என்று கூறினோம்.

நாம் எமக்கு வாக்களித்த வடக்கு, கிழக்கு வரைபடத்தில் உள்ள சிறிய தீவுகளை விரிவுபடுத்த வேண்டும்.கூறப்பட்ட பொய்கள் தெரியவந்தவுடன் நாம் எமது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவோம். அத்தீவுகளை அடிப்படையாகக் கொண்டு எமது பணிகளை மேற்கொள்வோம் என மேலும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!