சரத் பொன்சேகா ரணிலின் மீது பகிரங்க குற்றச்சாட்டு…!

எமது அரசாங்கத்தின் காலத்தில் சுய நலத்தோடு சில விடயங்கள் செய்யப்பட்டன. இதனால் மக்களின் வெறுப்பினை சம்பாதிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். இவை அனைத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தான் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொடயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசியதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,“ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளுக்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கதான் காரணம்.

மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்ற எம்மால் முடியாது போய்விட்டது. நல்லாட்சி என்ற அரசாங்கத்தை ஸ்தாபித்து, மக்களுக்கான சேவைகளை மேற்கொள்ள நாம் மறந்து விட்டோம்.இதற்கு முன்னாள் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். விசேடமாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்தான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. சுயநலமாகத்தான் சில விடயங்கள் செய்யப்பட்டன.எமது அரசாங்கம் பாரிய தவறிழைத்து விட்டது. இறுதியில் இதன் பிரதிபலனாகத்தான் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அமைந்தன. இதனால், எமது ஜனாதிபதி வேட்பாளர்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!