விக்கி தலைமையிலான மாற்று அணி படுபாதகமானது!

மாற்று அணி உருவாக்கமென்பது தமிழ்மக்களுக்கு செய்யப்படும் மாபெரும் சதி நடவடிக்கை என தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

கூட்டமைப்புக்குள் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் சுமுகமாக பேசித்தீர்த்து வருகின்றோம். தேர்தல் தொடர்பாகவும் சுமுகமான தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. எதிலும் எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை.

இதில் முதலாவது விடயம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் எவ்விதமான குழப்பமும் இல்லை. கடந்த இரண்டு மூன்று கூட்டங்களில் எல்லாவற்றையும் சுமுகமாகப் பேசி இணங்கியிருக்கிறோம்.எவருமே கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக சொன்னதும் கிடையாது.

கூட்டமைப்பு ஒழுங்காக எந்தவித குழப்பமும் இன்றி தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றது.இதற்கு முன்னர் மக்களிடம் இருந்து கிடைத்த ஆணையை விட சிறப்பான ஆணையை இம்முறை தேர்தலில் பெறுவோம்.

ஒற்றுமைக்கான அழைப்பொன்றை நாங்கள் விடுத்திருந்தோம்.ஆனால் அந்த ஒற்றுமைக்கான அழைப்பை அல்லது ஒற்றுமையை விரும்பாமல் ஏன் நிராகரிக்கின்றார்கள் என்றால் அதனை நிராகரிப்பவர்களே கூற வேண்டும்.நான் அவர்களிடம் விடுத்த அழைப்புக்கு பிரதான காரணம் தமிழ் தரப்புக்கள் ஒன்றாக பலமாக நிற்கவேண்டும்.தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் அந்த ஒற்றுமை இருக்கவேண்டும் என்பதுதான்.

உண்மையில் ஒற்றுமை ஒன்று இருந்தால் தமிழ்தேசிய பரப்பில் இருக்கின்ற கட்சிகளுக்குள் பிரதானமாக இருக்கின்ற கட்சியோடு மற்றவர்கள் சேர்வதுதான். சாத்தியமானது. தமிழ்தேசிய கூட்டமைப்புதான் அந்த பிரதானமான கட்சி.அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களையும் அவர்கள் சொல்ல முடியாது.

எனவே அதில் வந்து சேருமாறு நான் அழைப்பு விடுத்தேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் கூட்டமைப்புக்குள் ஏற்கனவே இருந்தவர்கள்.எனவே அந்த கட்சிக்கு அவர்கள் திரும்பி வருவதில் எந்நவிதமான பிரச்சினைகளும்் இல்லை. ஆனால் அவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக பிரிந்து போனவர்கள்.அந்தக்காரணங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதற்காக அவர்கள் ஒவ்வொருவரும் தற்போது ஒவ்வொரு நொண்டிச்சாட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மாற்று அணி எங்களுக்குத் தேவையில்லை. அது வரக்கூடாது. குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் தலைமையில் வந்தால் அது படுபாதகமானது. ஆனாலும் அது அவரின் வேலையாக இருக்கலாம்.அவர் உருவாக்க விரும்பினால் உருவாக்கட்டும்.ஆனால் பாதிக்கப்படப்போவது தமிழ் மக்கள்தான்.கூட்டமைப்புக்கு அது தாக்கத்தை செலுத்தாது.ஆனால் மக்கள் மத்தியில் சிறு குழப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!