ரஜினிகாந்தின் உருவ பொம்மையை எரித்த ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் கைது!

பெரியார் தலைமையில் 1971-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற போராட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சுக்கு பெரியார் திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் பதட்டத்தை உருவாக்கும் வகையில் பேசிய ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு மதுரை மாநகர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் கார்த்திக் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்.

அவர்கள், ரஜினிகாந்துக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். திடீரென்று தாங்கள் கொண்டு வந்த ரஜினிகாந்த் உருவ பொம்மையை தீ வைத்து கொழுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு உருவானது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து ரஜினிகாந்தின் உருவ பொம்மையை எரித்ததாக கார்த்திக், ஆதவன், செல்லப்பாண்டி உள்பட 5 பேரை கைது செய்தனர். மதுரையில் ரஜினிகாந்த் உருவ பொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!