ஆயுதப் போராட்ட காலத்தில் கல்வியை வளர்க்க பாடுபட்டோம்!

நாங்கள் ஆயுத போராட்ட காலத்தில் கூட கல்விக்கான பல வேலைத் திட்டங்களை செய்தோம். நான் கல்வியை வளர்ப்பதற்கு பாடுபட்டுள்ளேன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் வாகரைப் பிரதேசத்திலுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு பால்சேனை தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கல்வி என்பது ஒரு பொதுவான விடயம். நாங்கள் போராட்ட காலத்தில் கூட கல்விக்கான பல வேலைத் திட்டங்களை செய்தோம். நான் கல்வியை வளர்ப்பதற்கு பாடுபட்டுள்ளேன். அதில் போராட்டத்தில் கல்வி பிரிவை ஒரு அம்சமாக உருவாக்கி வைத்திருந்தேன்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கூடியளவு கல்வி வளர்ச்சிக்காக கல்விக் கழகம் என்ற நிறைய அமைப்புக்கள் செயற்பட்டது. போராட்ட காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசத்தில் கல்வி அபிவிருத்திக் குழு என்று முதல் முதலாக ஆரம்பித்தோம்.

வாகரைப் பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகளை தரமுயர்த்தி உள்ளோம். இன்னும் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். இதில் கூடுதல் கவனம் எடுத்து செயற்படுவேன் என்றார்.

வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மேலதிக செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி, வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ரசிக்காந்தன், வாகரைப் பிரதேச பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், கட்சி பிரதிநிதிகள், உறுப்பினர்கள், எனப் பலர் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!