கரன்னகொடவை முன்னிலையாக மீண்டும் உத்தரவு!

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னகொடவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை. அதனையடுத்து, அவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

எனினும், முன்னாள் கடற்படை பேச்சாளர் கொமாண்டர் டீ.கே.பி. தசாநாயக்க உள்ளிட்ட 13 பேர் நீதிமன்றில் முன்னிலையான நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். தலா 5 இலட்சம் ரூபாய் ரொக்கப்பிணையும் 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரபிணையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இவர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், சந்தேக நபர்களின் மனைவிகளை பிணையாளர்களாக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணை பெப்ரவரி 07 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!