என்னை சிறையில் அடைக்க முயற்சி – ராஜித சேனாரட்ன குற்றச்சாட்டு!

என்னை மீண்டும் சிறையில் அடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய ராஜித சேனாரட்ன, இவ்வாறு முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். குறித்த ஆணைக்குழுவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தலின் போது வெள்ளை வான் கடத்தல் சம்பந்தமாக நடத்தப்பட்ட ஊடக சந்திப்பு தொடர்பாக என்னை கைது செய்ய புலனாய்வுப் பிரிவினர் தயாராகியபோது நான் சட்டத்தரணி ஊடாக முன்பிணை மனுத்தாக்கல் செய்து, நீதிமன்றம் அந்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணைக்கு திகதி குறிப்பிட்டது. அத்துடன் பிணை வழங்கக்கூடிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தில் அழைப்பாணையைப் பெறாமல் சட்டரீதியற்ற முறையில் பிடியாணையைப் பெற்று தன்னை கைது செய்தமை அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

மேலும் 30.12.2019 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த மனுவை மீளாய்வு செய்யக்கோரி மேல் நீதிமன்றில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு திகதி குறிப்பிப்பட்டுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டு எனக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை இரத்து செய்வதற்கான நோக்கத்தில் முதலாம், இரண்டாம் சந்தேகநபர்களின் ஊடாக பொய்யான குற்றச்சாட்டொன்றை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் பதிவு செய்து என்னை சிறையில் அடைப்பதற்கு மீண்டும் முயற்சி எடுக்கப்படுகிறது” என ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!