காணி அபகரிப்பை எதிர்த்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமக்களின் காணிகளை அபகரித்த அதிகாரிகளைக் கண்டித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் வடக்கு மாகாண மக்கள் திட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (புதன்கிழமை) வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசே யுத்தத்தால் இடம்பெயர்ந்து இந்தியாவில் அகதிகளாக இருக்கும் மக்களின் காணிகளை அபகரிக்காதே, காணி விற்பனையால் கிடைத்தது எத்தனை கோடி, காணி ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பு போன்ற கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கும்போது, வவுனியா நகர பிரதேச செயலாளராக கடமையாற்றிய உதயராசா பல காணி மோசடிகளில் ஈடுபட்டமை தொடர்பாக தகவல்களை வெளிக்கொணர்ந்ததை அடுத்து, அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனினும் அவரை பணி இடைநிறுத்தம் செய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

அரசியல்வாதிகளினால் இம்மோசடிகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்படாத நிலையில், சாதாரண மக்களே இவ்விடயங்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியிருந்தனர். வன்னியைச் சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ இது தொடர்பாக கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். உயர் அதிகாரிகளின் ஊழல்கள் இவ்வாறே மறைக்கப்பட்டு வருகின்றது. எனவே இதில் சம்பந்தப்பட்ட கிராம சேவகர்கள் குடியேற்ற உத்தியோகத்தர்கள் தொடர்பாகவும் விசாரணை செய்ய வேண்டும்.

மக்கள் தாமாக துணிந்து வந்து முறைப்பாடு செய்ய ஆவண செய்யப்படவேண்டும். இன்று இந்தியாவில் உள்ளவர்களின் காணிகளில் கிரவல் அகழப்படுகின்றது. இதனை உடன் தடுத்து நிறுத்தவேண்டும். ஊழல் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். எனவே நாம் 3 கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். அவையாவன காணி சம்பந்தமான விசாரணை ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும் என்பதோடு, ஆணைக்குழுவின் மூலம் வடக்கில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் வாரியாகவும் விசாரணை நடத்த வேண்டும்.

இந்தியாவில் உள்ள எங்களது மக்களின் காணிகளை எந்த பாவனையும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். மூன்றாவதாக ஊழல் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம்” என மேலும் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!