விசாரணையில் இருந்து டிரம்பை விடுவிக்கும் செனட் சபை!

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக செனட் சபையில் நடைபெறும் விசாரணையில், சாட்சிகளை ஆஜர்படுத்த வலியுறுத்தும் தீர்மானத்தை குடியரசுக் கட்சியினர் நிராகரித்தனர். அமெரிக்க முன்னாள் துணை அதிபரான ஜோ பிடென் மீது ஊழல் விசாரணை நடத்த உக்ரைன் நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாக எழுந்த புகாரில் டிரம்ப் பதவி நீக்க விசாரணையை எதிர்கொண்டு உள்ளார். ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் பிரதிநிதிகள் சபையில் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேறியது. அந்த தீர்மானம் குடியரசு கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட செனட்சபையில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிபர் டிரம்ப், உக்ரைன் நாட்டுடன் முறையற்ற தொடர்பு கொண்ட போதும், அவரை பதவி நீக்கம் செய்வதற்கான குற்றமாக அதனைக் கருத முடியாது என்று செனட் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செனட் சபையின் மூத்த உறுப்பினரான குடியரசுக் கட்சியை சேர்ந்த லாமர் அலெக்சாண்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் டிரம்ப் பொருத்தமற்ற முறையில் நடந்து கொண்டார் என்பதை ஜனநாயக கட்சியினர் நிரூபித்துள்ளதாகவும். அதே சமயம் அவர் பதவி நீக்கம் செய்யப்படும் அளவிலான குற்றத்தில் ஈடுபட்டார் என்பதை நிரூபிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் உள்ளிட்ட மேலும் சில சாட்சிகளை விசாரிக்க வேண்டுமென ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தினர்.செனட்சபையில் இருக்கும் 100 உறுப்பினர்களில் 51 பேர் ஆதரவு அளித்தால் மட்டுமே சாட்சியை விசாரணைக்கு அழைக்க முடியும்.

ஆனால் அங்கு ஜனநாயகக் கட்சிக்கு 47 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், சாட்சியை விசாரணைக்கு அழைக்க குடியரசு கட்சி உறுப்பினர்கள் 4 பேரின் ஆதரவு தேவையாகிறது. ஆனால் குடியரசு கட்சியினர் யாரும் ஆதரவு அளிக்கவில்லை. இது ஜனநாயக கட்சியினருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் விசாரணையில் இருந்து டிரம்பை செனட்சபை விடுவிப்பதற்கும் இது வழி வகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!