சஜித் தலைமையில் புதிய பெயரில் கூட்டணி- பங்காளிக் கட்சிகள் முடிவு!

ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரை தவிர்த்து புதிய பெயரில் கூட்டணி அமைக்கப்படும் என்றும், கூட்டணியின் பெயர், சின்னம், யாப்பு ஆகியவை இன்னமும் சில தினங்களில் அறிவிக்கப்படும் எனவும், நேற்று நண்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசிய கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

1. ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் என்ற கூட்டணி கட்சிகளின் முடிவை ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு ஏற்றுக்கொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.

2. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில், ஒரு பரந்த கூட்டணியின் சார்பிலேயே நாம் அனைவரும் போட்டியிடுவோம். ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரை தவிர்த்து புதிய பெயரில் கூட்டணி அமைக்கப்படும். கூட்டணியின் பெயர், சின்னம், யாப்பு ஆகியவை இன்னமும் சில தினங்களில் அறிவிக்கப்படும்.

2. கூட்டணியின் பொதுசெயலாளர் பதவிக்கு, ஐதேகவின் சிரேஷ்ட உறுப்பினர் ரஞ்சித் மத்தும்பண்டாரவின் பெயரை, இன்றைய கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் ஆராய்ந்து முடிவு செய்தனர்.

3. 4. ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைக்குழுவின் தலைவராகவும் சஜித் பிரேமதாச செயற்படுவார். இதில் பங்காளி கட்சிகளின் தலைவர்களும், ஐதேகவின் பிரதிநிதிகளும் இடம்பெறுவர்.

4. ஒவ்வொரு பங்காளி கட்சியும் கூட்டணியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடும்.

5. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கூட்டணியின் வேட்பாளர் நியமன சபையின் தலைவராகவும் சஜித் பிரேமதாச செயற்படுவார். இந்த சபையில் பங்காளி கட்சிகளின் தலைவர்களும், ஐதேகவின் பிரதிநிதிகளும் இடம்பெறுவர்.

6. இன்றைய ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மீண்டும் நியமனம் வழங்கப்படும். ஒவ்வொரு பங்காளி கட்சியும் 2015ம் வருட தேர்தலில் பெற்றுக்கொண்ட நியமனங்களை மீண்டும் பெற்றுக்கொள்ளும். மேலதிக வேட்பாளர் நியமனங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

7. ஐதேக மற்றும் பங்காளி கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றத்தில், கூட்டணி உறுப்பினர்களாக செயற்படுவார்கள். ஒவ்வொரு கட்சியின் உறுப்பினரும் குறிப்பிட்ட கட்சிகளின் ஒழுங்கு கோவையின் கீழ் செயற்படுவார்கள். ஒரு கட்சியினால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு அங்கத்தவரை இன்னொரு பங்காளி கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் உள்வாங்க முடியாது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!