யாழ். பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர்கள் அறிவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் பேரவைக்கு 14 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நியமிக்கப்பட்ட 14 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக பதவி வழி வரும் 13 உறுப்பினர்கள் அடங்கலாக 27 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பேரவையின் ஆட்சிக்காலம் தொடர்ந்து வரும் மூன்று ஆண்டுகளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு வெளிவாரியாக 16 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டிய நிலையில் இம்முறை 14 உறுப்பினர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகம் வன்னி பல்கலைக்கழகம் என்று உருவாக்கப்படவுள்ள நிலையில் அந்த வளாகத்தின் மூன்று உள்வாரி உறுப்பினர்கள் நீங்கலாக, உள்வாரி உறுப்பினர்கள் 13 பேர் என்ற அடிப்படையில் பேரவைக்கு வெளிவாரியாக 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் எஸ்.மோகனதாஸ், உதவிக் கல்விப் பணிப்பாளர் பஞ்சநாதன் சுதர்சன், கலாநிதி ஆறு. திருமுருகன், வெளிநாட்டு தூதரக மூன்றாம் நிலைச் செயலர் விதுர்சன் வின்சன்ற் ராஜாராம், சட்டத்தரணி ஆர்.ரி.விக்னராஜா (முன்னாள் மேல் நீதிமன்ற ஆணையாளர்), கலாநிதி சுரேன் ராகவன் (முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர்), நொத்தாரிசு மார்க்கண்டு திருவாதவூரன், பொறியியலாளர் விஸ்வலிங்கம் சுதாகர் (வீதி அபிவிருத்தி அதிகார சபை), தனியார் விவசாய நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் குலேந்திரன் சிவராம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் தில்லையம்பலம் விமலன், முன்னாள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினர் பொன்னையா தியாகராசா, கணக்காளர் வி.கனகசபாபதி, கோடீஸ்வரன் ருசாங்கன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!