உல்லாசமாய் உலகம் சுற்றும் நித்யானந்தாவுக்கு பெரும் சிக்கல்… நீதிபதி குன்ஹா அதிரடி உத்தரவு..!

பாலியல் வழக்கில், தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமினை பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதி குன்கா ரத்து செய்ததால் அவருக்கு பெரும் சிக்கல் உருவாகி இருக்கிறது.

நித்யானந்தா மீதான பாலியல் அத்துமீறல் வழக்கில் 2010 ஆம் ஆண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் பலமுறை விசாரணைக்கு ஆஜராகமல் வாய்தா வாங்கிக்கொண்டே இருந்தார். இந்நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென லெனின் கருப்பன் என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார். இது குறித்து நித்யானந்தாவுக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியது.

அதற்கும் பதில் இல்லாததால் அவரை நேரில் ஆஜர்படுத்த போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்த போது காவல் துணை ஆணையர் பி.பால்ராஜ் நித்யானந்தா ஆன்மீக சுற்றுலாவில் இருப்பதால் அவரது சிஷ்யையான குமாரி அர்ச்சனானந்தாவிடம் அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது எனத் தெரிவித்தார்.

இது சம்மந்தமாக பதிலளித்த அர்ச்சனானந்தா, ’நித்யானந்தா எங்கிருக்கிறார் என எனக்குத் தெரியாது. ஆனால் போலீசார் வலுக்கட்டாயமாக இந்த நோட்டீஸை என்னிடம் கொடுத்து சென்றனர்’ எனத் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதிகள் ‘இதுதான் நீங்கள் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தும் முறையா?’ எனக் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாலியல் வழக்கில், தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமினை பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதி குன்கா ரத்து செய்தார். நீதிமன்றத்தில் ஆஜராகமல், 40 முறை வாய்தா வாங்கியிருந்த நிலையில், இப்போது நித்யானந்தா கட்டாயம் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!