4 அடி மாப்பிள்ளை.. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் கடைசியில் நடந்தது என்ன?

4 அடி உயரம் கொண்ட நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் மகளை வேண்டாம் என கூறி பொலிஸ் நிலையத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர் காதலியின் பெற்றோர்கள்.

கரூரின் சோமூரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(வயது 25), பிசிஏ பட்டதாரியான இவர் சுமார் 4 அடி மட்டுமே உயரம் கொண்டவர்.

வீட்டிலிருந்தபடியே ஓன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் வேலையை செய்து வருகிறார்.

இவருக்கும் சிவகங்கையை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணுக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் காதலாக மாற இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர், ஆனால் விக்னேஸ்வரன் குள்ளமாக இருக்கிறார் என கூறி பவித்ராவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் தங்கள் காதலில் உறுதியாக இருந்த ஜோடி, விக்னேஸ்வரனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருமணம் நடந்தது.

இத்திருமணத்திற்கு பவித்ராவின் வீட்டில் எதிர்ப்பு எழுந்ததால், கரூர் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

இதனையடுத்து பொலிசார் இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும், பலனில்லாமல் போனது.

தங்களுக்கு மகளே வேண்டாம் என கூறிவிட்டு பவித்ராவின் பெற்றோர் சென்றுவிட்டதால் விக்னேஸ்வரனுடன் சேர்ந்து புதுவாழ்வை தொடங்க பவித்ரா சென்றுவிட்டதாக தெரிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!