பிரசவ விடுமுறையை 6 மாதங்களாக அதிகரிக்க யோசனை!

பெண் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 4 மாதகால பிரசவ விடுமுறையை, 6 மாதம் வரை நீடிப்பது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டின் தற்போதைய சனத்தொகையில் 52 வீதமானவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். அந்தந்த பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு தேவையான நிதியியல் ஒத்துழைப்புகளை வழங்கக் கூடிய வகையிலான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொழில் முயற்சிகளில் ஈடுபடும் பெண்களுக்கு பலமாக அமையும்.

பொதுநிர்வாக சட்ட திட்டங்களுக்கமைய பெண்களுக்கு மகப்பேற்று காலங்களுக்கான 84 வேலை நாட்களுக்கு முழுமையான சம்பளத்துடனான விடுமுறையும் அதற்கு மேலதிகமாக பகுதியளவிலான சம்பளத்துடனான 84 நாள் விடுமுறையும் தேவைப்பட்டால் சம்பளம் இல்லாத 84 நாள் விடுமுறையும் வழங்குவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளத்துடனான 4 மாத மகப்பேற்று விடுமுறை காலத்தை 6 மாத காலம் வரையில் நீடிப்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!