சஜித் கூட்டணியில் இணைவதாக மனோ, ஹக்கீம், சம்பிக்க கட்சிகள் அறிவிப்பு!

சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகியுள்ள ´ஒன்றிணைந்த மக்கள் சக்தி´ கூட்டணியில் இணைந்து கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. மூன்று கட்சிகளும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தேவையான செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. தற்போதைய அரசாங்கம் மக்களின் அபிலாகைள் அனைத்தையும் புறந்தள்ளி அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுப்பதோடு நாட்டின் பொருளாதாரத்தை பாதாளத்திற்குள் தள்ளியுள்ளது.ஆகவே தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பாரிய மக்கள் சக்தியை உருவாக்கும் பொறுப்பு எமக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலமொன்றில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டதன் ஊடாக மக்களுக்கு பல வெற்றிகளை ஈட்டிக்கொடுக்க முடிந்தது. எனவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் புதிய கூட்டணி ஒன்றை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அனுமதியளித்துள்ளது.

அதற்கமைய கூட்டமைப்பின் பொதுச்செயலாளரை நியமிக்கவும், பிரதமர் வேட்பாளர் மற்றும் வேட்பு மனு குழுவின் தலைவராக செயற்படுவதற்கான அதிகாரங்கள் என்பன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆகவே முற்போக்கான பலமிக்க அரசாங்கமொன்றை உருவாக்குவதற்காக சஜித் பிரேமதாசவின் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு உழைக்க எதிர்பார்க்கின்றோம்.

அதற்கமைய ´ஒன்றிணைந்த மக்கள் சக்தி´ என்ற கூட்டணியின் வெற்றிக்காக பாடுபட ஜாதிக ஹெல உருமய, தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தயாராக உள்ளோம்.´ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!