சிகிச்சை பெற்றவர் மரணம் – யாழ். வைத்தியசாலைக்குள் கும்பல் அடாவடி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடன் தொடர்புடையவர்கள் நேற்று முன்தினம் இரவு வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களைத் தாக்கி, அச்சுறுத்தியதால் பதற்ற நிலை ஏற்பட்டது.

அச்சுவேலி-தெல்லிப்பளை வீதியில் கடந்த 16ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அதனைச் செலுத்தியவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார்.

அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தபோதும் நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இளவாலை பெரியவிளானைச் சேர்ந்த நட்சேத்திரம் றொடிசன் அயன் (வயது -34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிகிச்சை பெற்றவர் உயிரிழந்த விடயத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் அவரது உறவினரான ஊழியர் ஒருவர் உயிரிழந்தவருடன் தொடர்புடையவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலைக்குள் புகுந்த 8 பேர் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். மருத்துவ சேவையாளர் ஒருவரை அவர்கள் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதும் பொலிஸார் அங்கு செல்லும்போது அடாவடியில் ஈடுபட்டவர்கள் தப்பித்துள்ளனர். எனினும் பொலிஸார் துரத்திச் சென்று இருவரை கைது செய்தனர். பின்னர் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.

உயிரிழந்தவரின் சகோதரன் உட்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் நேற்று மாலை முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையானர். குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்த பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம், சந்தேகநபர்கள் 5 பேரையும் வரும் மார்ச் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள் உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினர்கள் என்று மன்றுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. அதனால், உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு வசதியாக ஒரு மணி நேரம் அங்கு அவர்களை அழைத்துச்செல்ல சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!