ஒருதலை காதல் விபரீதம்: மாணவியை நூதன முறையில் கடத்திய பேராசிரியர்!

ஆந்திராவில் மாணவியின் வீட்டுக்கு பர்தா அணிந்து சென்ற பேராசிரியர் ஒருவர், மாணவியை மிரட்டி பர்தா அணிய வைத்து வேலூருக்கு கடத்தி வந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மண்டை ஓடு மற்றும் எலும்புடன் மாணவியின் வீட்டுக்கு சென்று தீ வைக்க கிரிமினல் ஆசிரியர் போட்ட திட்டம் நமத்து போன பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி… இவர்தான் ஒரு தலையாக காதலித்த மாணவியை கடத்திச்செல்வதற்காக கேடி பில்லா கில்லாடி ரங்கா போல திட்டம் வகுத்து வசமாக சிக்கிக் கொண்ட பேராசிரியர் கிருஷ்ண மோகன்..! ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பிடெக் படித்தார். அப்போது அங்கு உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வந்த கிருஷ்ணமோகன் என்பவர் அந்த மாணவியிடம் நட்பாக பழகுவது போல நடித்து ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். காதலை தெரிவித்த நிலையில் மாணவி ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது. கல்லூரி படிப்பை முடித்து விட்டு அந்த மாணவி கணினித்துறை படிப்பிற்காக பெங்களூரு சென்ற நிலையில், அங்கும் சென்று தன்னை காதலிக்கும்படி மாணவியை வற்புறுத்தி வந்துள்ளார் கிருஷ்ணமோகன். இது குறித்து பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் அவர்கள் தங்கள் மகளை சொந்த ஊருக்கே அழைத்து வந்து விட்டனர்.

வியாழக்கிழமை பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பக்கத்து ஊரில் திருமணத்திற்காக சென்று விட, வீட்டில் அந்த மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது பர்தா அணிந்தபடி பெண் ஒருவர் வீட்டிற்கு வந்ததாகவும் அவருடன் மாணவி பர்தா அணிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்து ஊரில் இருந்தபடியே அந்த மாணவியின் பெற்றோர் போலீசுக்கு தகவல் தெரிவிக்க, காவல்துறையினர் விரைந்து வந்து பார்த்த போது மாணவியின் வீட்டின் சமையலறையில் பெட்ரோல் ஊற்றப்பட்ட மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடந்தன. சமையலறையில் கியாஸ் திறந்து விடப்பட்டு இருந்தது, மெழுகு திரி ஒன்று மெலிதாக எரிந்து கொண்டு இருப்பதையும் கண்டு அதிர்ந்து போயினர்

மெழுகுதிரியை அணைத்த கையோடு கியாஸ் கசிவையும் சரிசெய்தனர். மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரின் செல்போன் நம்பரை ஆய்வு செய்த போது சம்பவம் நடந்த நேரத்தில் ஒரு தலை காதலன் கிருஷ்ண மோகன் அந்த பகுதியில் சுற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வேலூரில் மாணவியுடன் பதுங்கி இருந்த பேராசிரியர் கிருஷ்ணமோகனை கைது செய்த காவல்துறையினர், வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாணவியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் மாணவியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வெறியாக மாறியதால் கடத்திச்சென்று கட்டாய திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டதாக தெரிவித்துள்ளான்.

கடத்திச்சென்ற பின்னர் அவரது உறவினர்கள் தேடி வந்து தொல்லை கொடுக்க கூடாது என்பதால் வீட்டோடு மாணவி எரிந்து சாம்பலானது போன்று நம்பவைக்க திட்டம் போட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது. அதற்காக சுடுகாட்டில் இருந்து மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகளை சேகரித்து எடுத்து வந்த பேராசிரியர் கிருஷ்ண மோகன், இரண்டு பாட்டில்களில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு அடையாளம் காண இயலாதபடி பர்தா அணிந்தபடி மாணவியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளான். உள்ளே சென்றதும் மாணவியை மிரட்டி பர்தா அணியவைத்து தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த கிருஷ்ணமோகன், வீட்டின் சமையலறையில் மண்டை ஓடு மற்றும் எலும்புகளை போட்டு பெட்ரோல் ஊற்றி அருகில் மெழுகு திரி ஒன்றை எரியவைத்துள்ளான்.

மெல்லமாக கியாஸை திறந்து விட்டுள்ளான். வீடு முழுவதும் பரவினால், வீடு தானே தீப்பற்றிக் கொள்ளும் போது எழும்புகள் சாம்பலானால், மாணவி தீவிபத்தில் எரிந்து சாம்பலானதாக கருதுவார்கள் என நினைத்து, இந்த கிரிமினல் வேலையை செய்துள்ளான் கிருஷ்ண மோகன் என்கின்றனர் காவல்துறையினர். போலீசார் உரிய நேரத்தில் மெழுகுவர்த்தியை அணைத்து வீட்டில் கியாஸ் கசிவை சரிசெய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அதே நேரத்தில் கல்லூரி காலங்களில் தங்களிடம் பழகும் ஆண்களின் பார்வை எத்தகையது என்பதை மாணவிகள் புரிந்து பழக தவறினால், மண்டை ஓடு பேராசிரியர் போன்ற காதல் வில்லன்களிடம் சிக்க நேரும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று..!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!