வாழைப்பழத்தில் பூச்சிமருந்தை கலந்து மகன்களுக்கு கொடுத்த தந்தை!

தமிழகத்தில் மனைவி இறந்த துக்கத்தில் 2 மகன்களுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் (42). இவருக்கு இந்துமதி (35) என்ற மனைவியும், சுனில் (13), விமல் (9) என்ற 2 மகன்களும் இருந்தனர். இந்துமதிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. பல மருத்துவரிடம் காண்பித்தும் குணமாகவில்லை. சில மாதங்களுக்கு முன்பு இந்துமதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்துமதியின் இறப்பு சுந்தருக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் 2 மகன்களோடு சுந்தர் வாழ்க்கை நடத்தினார். ஆனாலும் மனைவியின் பிரிவால் சுந்தர் விரக்தியுடன் காணப்பட்டார்.

வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்து போனால் மகன்கள் அனாதையாகி விடுவார்கள் என எண்ணிய அவர், மகன்களையும் கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நேற்று இரவு வாழைப்பழத்தில் பூச்சி மருந்தை கலந்து 2 மகன்களுக்கும் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டார். அப்பா ஆசையோடு கொடுத்ததால் அவரின் சிறு பிள்ளைகளும் அதில் விஷம் இருப்பது தெரியாமல் வாங்கி சாப்பிட்டனர்.

சிறிது நேரத்தில் சுந்தர், மகன்கள் சுனில், விமல் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. பலமுறை தட்டியும் பலனில்லை. அதிர்ச்சியடைந்த அந்தப்பகுதி மக்கள் பொலிசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டு கதவை உடைத்து பார்த்த போது மூவரும் சடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்களின் சடலங்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!