10 வருடங்களாக கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவி: சொந்த ஊருக்கு திரும்பியபோது நேர்ந்த கதி!

தமிழகத்தில் கணவரை பிரிந்து சென்று வேறு ஊரில் வசித்து வந்த மனைவி கொரோனா பீதியில் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி செல்வி. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து சென்ற செல்வி அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவருடன் திருப்பூருக்கு சென்றார்.

அங்கு இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். இருவரும் அங்கு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இதனிடையே கொரோனா வைரஸ் பரவல் பீதியால் அங்கு வேலை பார்த்த அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். இதையடுத்து சொந்த ஊருக்கு செல்வியும், முருகனும் திரும்பினர். அப்போது இருவரையும் அவரது உறவினர்களான கதிரேசன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தங்களின் கூட்டாளிகளுடன் சென்று அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

இதில் செல்வி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் முருகன் படுகாயங்களுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் செல்வி உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!