ஊரடங்கை மீறி நடந்த பொதுக்கூட்டம்: 9 பேர் கொரோனா தொற்றுக்கு பலி!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் மலேசியா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் சுமார் 1,700 பேர் கலந்து கொண்டனர். இதில் பங்குகொண்டவர்களில் கணிசமான பேர் பின்னர் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் சென்றனர். அவர்களில் 9 பேர் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மரணம் அடைந்ததாகவும், மேலும் டெல்லியை சேர்ந்த 24 பேர் அந்த நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டம் நடந்த பகுதியில் தங்கி இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 335 பேருக்கு சளி, இருமல் இருந்ததால் அவர்கள் டெல்லியில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கிடையே, கணிசமான பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் அவர்களுக்கும், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால் அப்படி வந்துள்ளவர்கள் யார்-யார்? என்பது பற்றியும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றியும் அந்தந்த மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி நேற்று கருத்து தெரிவித்த டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கூட்டம் நடத்தியது தவறு என்றும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில கவர்னரை கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் கூறினார். ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி கூட்டம் நடந்ததற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!