யாழ்ப்பாணத்தில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து யாழ்ப்பாணத்தில் நோய்த்தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

அரியாலை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் ஆகியோரே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரியாலையில் ஆராதனை நடத்திய சுவிஸ் மதகுருவுடன் கூடிய தொடர்புகளைப் பேணியவர்களுக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. போதகரின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை பலாலி பகுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் 10 பேரின் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன.

அவர்களில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அரியாலை முள்ளி வீதியைச் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 36 வயதான தாயார், 20 வயதான மகன் மற்றும் 15 வயதுடைய மகள் ஆகியோரே தொற்றிற்கு இலக்காகியுள்ளனர்.

தற்போது அவர்களுடைய உடல்நிலை சாதாரணமாகவே காணப்படுகின்றது. இருப்பினும், மேலதிக சிகிச்சை அளிக்கும் முகமாக அம்புலன்ஸ் மூலம் இன்று வெலிகந்த விசேட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இனம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது. இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 7 பேரும் அடங்கியுள்ளனர்.

குறித்த ஏழு நோயாளிகளும் சுவிஸ் போதகருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!