தீவிரமடையும் கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 102 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் இன்று 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்த எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகின்ற நிலையில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்ற போது அதில் தமிழகத்தில் இருந்துசென்ற 1500 பேர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட 1500 பேரையும் தனிமைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையே, டெல்லியில் இருந்து வந்தவர்களில் நேற்று 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளத நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு 411 ஆக தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!