கொரோனா தாக்குதலில் இருந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் முதல் ஐரோப்பிய நாடு!

கொரோனா அச்சுறுத்தல் படிப்படியாக விலகி வரும் நிலையில், ஆஸ்திரியா ஈஸ்டர் பண்டிகைக்கு பின்னர் சாதாரண நிலைக்கு திரும்பும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் திங்களன்று தலைநகர் வியன்னாவில் பேசிய சேன்ஸலர் Sebastian Kurz, ஏப்ரல் 14 முதல் சிறு கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளை திறந்து செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்றார். மே மாதம் 1 ஆம் திகதி முதல் அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் முடி திருத்தும் கடைகளும் செயல்பட அனுமதிக்கப்படும் என்றார்.

மே மாதம் பாதியில் இருந்து அனைத்து உணவகங்களும் செயல்பட அனுமதிக்கப்படும் என கூறியுள்ள அவர், அதுவரை பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் இன்றார். ஆனால் ஜூன் மாத இறுதி வரை எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என சேன்ஸலர் Sebastian Kurz தெரிவித்துள்ளார். கூடுதலாக, முகக்கவசம் அணிவது எதிர்காலத்தில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்துக் கடைகளில் கட்டாயமாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரையான பொதுமக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ள சேன்ஸலர் Sebastian Kurz, ஈஸ்டர் நாட்களிலும் சமூக விலகல் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த Tyrol மாநிலத்தில் சிறிய விதிவிலக்குகளுடன் நோய் நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். கடந்த மார்ச் 18 முதல் இங்குள்ள 279 நகராட்சிகளும் மொத்தமாக முடக்கப்பட்டிருந்ததுடன், உரிய காரணங்களுக்காக மட்டும் பொதுமக்கள் குடியிருப்பில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் கடும்போக்கான இந்த நடவடிக்கைகள் உரிய பலனை அளித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. திங்களன்று பகல் வெளியான தகவலின் அடிப்படையில் ஆஸ்திரியாவில் கொரோனாவுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 12,008. இது 100,000 பொதுமக்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136 என்ற நிலையில் உள்ளது. மட்டுமின்றி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது 2 சதவீதத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!