ஓரளவுக்கு பாதுகாப்பான நிலையில் வடக்கு!

வடக்கில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக இல்லை. வட மாகாணம் ஓரளவு பாதுக்காப்பாகவே உள்ளது என்று யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வடக்கில் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பாக இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கொரோனா தொற்றில் அதிகமானவர்கள் தொற்றிற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் நோய்க் காவிகளாக இருப்பார்கள். இதில் எல்லோரும் அவதானமாக இருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தல் முகாமில் இவர்கள் அடையாளம் காணப்பட்டதால் பிரச்சினையில்லை. ஆனால், சமூகத்தில் யாருக்காவது அறிகுறியில்லாமல் தொற்று ஏற்பட்டிருந்தால் அது வேறு ஒருவருக்கு பரவினால், மற்றவர்களுக்கும் பரவக்கூடிய நிலைமையுள்ளது.

ஊரடங்கு பற்றி, நோயின் எதிர்காலம் பற்றி உடனடியாகக் கூறிவிட முடியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் இது உலகளாவிய தொற்றாகும்.

நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்தே அடையாளம் காணப்பட்டனர். பி.சி.ஆர். பரிசோதனைக்குத் தேவையான பொருட்கள் ஓரளவிற்கு கையிருப்பில் உள்ளது. மத்திய அரசு மூன்று நாட்களுக்கு ஒருமுறை அவற்றை எமக்கு வழங்கி வருகிறது.

யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள இயந்திரத்தின் மூலம் நாளொன்றுக்கு 72 பரிசோதனைகள் செய்யலாம். விரைவில் யாழ். போதனா வைத்தியசாலையிலுள்ள இயந்திரம் மூலமும் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளொம். அங்கும் நாளொன்றுக்கு 72 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளலாம்.

கேள்வி:- தனிமைப்படுத்தல் மையத்தில் தொற்று ஏற்பட்டதா?

பதில்:- தனிமைப்படுத்தல் செயற்பாட்டை இராணுவமும், சுகாதார அமைச்சும் மேற்கொள்கிறார்கள். இதுபற்றி என்னால் தெளிவாகக் கூற முடியாவிட்டாலும், பாதிரியாருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!