‘என் லைன்ல உங்க அப்பா குறுக்க வராரு’…’தாயின் கோர திட்டத்திற்கு துணை போன மகன்’…நெஞ்சை நொறுக்கும் சம்பவம்!

கணவனை கொல்ல மனைவி திட்டமிட்ட நிலையில், அதற்கு மகனும் சேர்ந்து துணை போன சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகில் உள்ள காணமலை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு திருமணமாகி ராஜம்மாள் என்ற மனைவியும், மாதவன், அரவிந்தன் என்ற இரு மகன்களும் உள்ளனர். இதற்கிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ராஜம்மாளுக்கும், அவருடைய கணவர் குமாருடைய அண்ணன் சேட்டு என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அறிந்து கோபமடைந்த கணவர் குமார், 2017-ம் ஆண்டு சேட்டுவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்த வழக்கு விசாரணை தற்போது நிலுவையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில் கடந்த 4-ந் தேதி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் நிலத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குமார், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் போலீசாரின் சந்தேக பார்வை குமாரின் மனைவி ராஜம்மாள் மீது திரும்பியது.

இதையடுத்து ராஜம்மாளை பிடித்து நடத்திய விசாரணையில், தானும், தனது மகன் மாதவனும், சேர்ந்து தான் கணவர் குமாரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக குண்டை தூக்கி போட்டார். இதை கேட்டு அதிர்ந்துபோன போலீசார், இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ராஜம்மாளுக்கு ஏற்கனவே தகாத உறவு இருந்ததால், மேலும் சிலருடன் தகாத உறவு இருக்கலாம் என குமாருக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது.

இதனால் அவ்வபோது குடித்து விட்டு வரும் அவர், மனைவி ராஜம்மாளுடன் சண்டை போட்டுள்ளார். மேலும் அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜம்மாள் தன்னுடைய மூத்த மகன் மாதவனுடன் சேர்ந்து கணவர் குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி 3-ந்தேதி குடிபோதையில் வந்து தகராறு செய்த குமாரை, ராஜம்மாள் விறகு கட்டையால் தலையில் தாக்கினார். அதில் படுகாயம் அடைந்த அவர் சுருண்டு கீழே விழுந்தார். அவரை ராஜம்மாளும், மாதவனும் சேர்ந்து கயிறால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் கணவரின் உடலை அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரின் நிலத்தில் போட்டுவிட்டு, ஒன்றும் தெரியாதது போல வீட்டிற்கு வந்துள்ளார்கள். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு, மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தந்தையை கொலை செய்ய, மகனே தாய்க்கு உதவியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!