கொழும்பில் இருந்து யாழ். தப்பி வந்த 7 பேர் – கைது செய்யும் முயற்சியில் படைத்தரப்பு!

கொழும்பில் கொரோனா வைரஸ் பரவல் ஆபத்து வலயமாக அறிவிக்கப்பட்ட, பகுதியில் இருந்து உரிய அனுமதியின்றி, ஏழு பேர் யாழ்ப்பாணத்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லொறி மூலம் இவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்திருப்பதாக, கிடைத்த தகவலை அடுத்து, அவர்களையும், லொறி சாரதி, உதவியாளர் ஆகியோரையும் கைது செய்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் க.மகேசன் நேற்றிரவு அவசர ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டத்தின் அபாய வலயங்களில் தங்கியிருந்தவர்களான, யாழ்ப்பாணம் குருநகர், பாசையூர், நாவற்குழி, தெல்லிப்பளை, தொல்புரம் மற்றும் சங்கானையைச் சேர்ந்த 7 பேர், இரகசியமான முறையில், லொறிகள் மூலம், யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்துள்ளனர்.

இவர்கள் தொடர்பாக விபரங்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளன. அதேவுளை, வலிகாமம்மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட சங்கானை, தொல்புரம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு மாத காலம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, கொரோனா அச்சுறுத்தலிலிருந்து மீள்வதற்காக அனைவரும் செய்த தியாகம் இந்த நபர்களால், உதாசீனம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறானவர்கள் அடையாளம் காணப்பட்டால் தனிமைப்படுத்தல் நிலையத்தில் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உண்மையைக் கூறி உரிய முறையில் அனுமதிகளைப் பெற்ற இங்கு வருகை தந்திருக்க முடியும்.

அவர்களால் சொந்தக் குடும்பத்தினருக்கும் அயலவர்களுக்கும் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!