மரணப் படுக்கையில் அதிபர் கிம் ஜாங் உன்? வட கொரிய தலைநகரில் குவிந்த பொது மக்கள்

வடகொரியா தலைநகர் பியாங் யாங்கில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்ததையடுத்து அங்கு பெரும் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அவருடைய உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், வடகொரிய தலைநகர் பியாங்யாங் நகரில் உள்ள அங்காடிகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான அங்காடிகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் விற்றுத் தீர்க்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள், காய்கறிகளுக்கு தொடக்கத்தில் தட்டுப் பாடு நிலவியது. அதன்பின் மற்ற பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதிபர் கிம் ஜாங் உடன் உடல் நிலை மற்றும் கொரோனா வைரஸ் தொற்று ஆகிய பிரச்சினைகள் காரணமாக மக்கள் பீதியடைந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்கி குவிப்பதாக தெரிகிறது.

கொரோனா வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கியதுமே கடந்த ஜனவரி மாதம் தனது நாட்டு எல்லையை வடகொரியா மூடிவிட்டது. இப்போது உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அணு ஆயுத ஆராய்ச்சி, ஏவுகணை சோதனை போன்ற நடவடிக்கைகளால் வடகொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகள் உள்ளன.

எனவே, அங்கு உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது புதிதல்ல. தற்போது கொரோனா தொற்று உள்ளதால், இந்தப் பிரச்சினை அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதேவேளை, வடகொரிய அதிபரின் உடல் நிலை பாதகமாக இல்லை என்று தென்கொரியா தகவல் வெளியிட்டதுடன், அது தொடர்பான தகவல்கள் எவையும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!