பளைப் பகுதி மக்கள் ஆனையிறவைக் கடக்க அனுமதி!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது, கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி மக்கள் ஆனையிறவு சோதனைச் சாவடி ஊடாக சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பளை பிரதேசம், யாழ். மாவட்ட கட்டளை தளபதியின் கீழேயே இருந்து வருகிறது. தற்போது, மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால், ஊரடங்கு தளர்த்தப்படும் போது பளை மக்கள் தமது நிர்வாக மாவட்டத்தின் பிரதான நகரான கிளிநொச்சிக்கு சென்று வருவதற்கு ஆனையிறவு சோதனைச் சாவடியில் உள்ள இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை. இதனால் பளை- பச்சிலைப்பள்ளி பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இதுகுறித்து, இராணுவ மற்றும் அரசாங்க உயர்மட்டங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது, பச்சிலைப்பள்ளி மக்கள் ஆனையிறவு சோதனைச் சாவடி ஊடாக கிளிநொச்சி சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!